திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை
பண் - பியந்தைக்காந்தாரம்
எந்தை ஈசனெம் பெருமான்
    ஏறமர் கடவுளென றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
    சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்திக்
    கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
1
ஈர வார்சடை தன்மேல்
    இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச்
    சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
2
(*)பிணிக லந்தபுன் சடைமேற்
    பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத
    பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.

(*) பிணி - கட்டுதல்
3
துன்ன ஆடையொன் றுடுத்துத்
    தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர்க் கல்லால்
    ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்திப்
    பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
4
வெருகு ரிஞ்சுவெங் காட்டி
    லாடிய விமலனென் னுள்கி
உருகி நைபவர்க் கல்லால்
    ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை
    மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
5
உரவு நீர்சடைக் கரந்த
    வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற்
    பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
6
நீல மாமணி மிடற்று
    நீறணி சிவனெனப் பேணுஞ்
சீல மாந்தர்கட் கல்லாற்
    சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
7
செழுந்தண் மால்வரை யெடுத்த
    செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான்
    போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக்
    குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
8
நுணங்கு நூலயன் மாலும்
    இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால்
    வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி
    வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.
9
சாக்கி யப்படு வாருஞ்
    சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப்
    பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப்
    பொருபுனல் (*)நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
    அரத்துறை யடிகள்தம் அருளே.

(*)நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவெனப் பதம் பிரிக்க.
10
கறையி னார்பொழில் சூழ்ந்த
    காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த
    அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல்
    மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லை
    பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.
11
இது முத்துச்சிவிகை, முத்துச்சின்னம் முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com